உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எக்டேருக்கு 7 டன் நெல் மகசூல் முதல்போக விவசாயிகள் மகிழ்ச்சி

எக்டேருக்கு 7 டன் நெல் மகசூல் முதல்போக விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம்: முதல் போக நெல் அறுவடையில் எக்டேருக்கு 7 டன் மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14707 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் தற்போது முதல் போக சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்.17 ல் பெய்த மழையால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்மழை குறைந்ததால், அறுவடை துவங்கியது. கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் அறுவடை 80 சதவீதம் முடிவடையும் நிலையில் உள்ளது. உத்தமபாளையம் வட்டாரத்தில் தாமதமாக நடவு செய்ததால் அப்பகுதியில் மட்டும் அறுவடை துவங்கவில்லை. இதுவரை நடந்துள்ள அறுவடையில் கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் ஒரு ஏக்கருக்கு 2800 கிலோ கிடைத்துள்ளது. அதாவது எக்டேருக்கு 7 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது. சின்னமனூர் விவசாய சங்க தலைவர் ராஜா கூறுகையில், ஆர்.என். ஆர். ரகம் நல்ல மகசூலை தந்துள்ளது. ஏக்கருக்கு 45 மூடை (ஒரு மூடை 62 கிலோ ) 2800 கிலோ வரை கிடைத்துள்ளது, இது நல்ல மகசூலாகும். கடந்தாண்டை விட இது கூடுதல் . விலையை பொறுத்தவரை ஒரு மூடைக்கு ரூ.1320 கிடைக்கிறது. கடந்தாண்டும் இதே விலை தான் கிடைத்தது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மூடை ரூ.1574 வரை கிடைக்கிறது. ஆனால் அங்கு சென்றால் ஈரப்பதம், தூற்றி சுத்தம் செய்து தர சொல்ல கூறுவார்கள். வயலில் இருந்து கொண்டு செல்ல வாகன வாடகை தர வேண்டும்.. தனியார் வயலுக்கே வந்து எடுத்து செல்கின்றனர். எனவே பெரும்பாலும் தனியாரிடம் நெல்லை விற்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ