காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் வரதராஜபுரம் விவசாயிகள் கவலை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மலைப்பகுதியில் இருந்து கூட்டமாக இறங்கி வரும் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்துவதால் வரதராஜபுரம் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி ஒன்றியம் வரதராஜபுரம் அருகே கரட்டு பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பல ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி உள்ளது. இரு மாதங்களுக்கு முன் விதைப்பு செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்கள் தற்போது பலன் தரும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் கரட்டு பகுதியில் இருந்து கூட்டமாக இரவில் இறங்கி வரும் காட்டு பன்றிகள் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதி விவசாயிகள் பல ஆயிரம் செலவு செய்து நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். கரட்டு பகுதியில் காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவில் விவசாய நிலங்களில் பாதுகாப்பு மேற்கொள்ள முடியவில்லை. கூட்டமாக இறங்கி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தவும் வழி தெரியவில்லை. வனத்துறையினர் வருவாய்த் துறையினர் இப்பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.