ரூ.99.50 லட்சம் வசூலித்து மோசடி நிதி நிறுவன பெண் இயக்குனர் கைது
தேனி:முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி பொது மக்களிடம் ரூ.99.5 லட்சம் வசூலித்து மோசடி செய்து திருப்பூரில் தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குனர் சரண்யாதேவி 32,யை போலீசார் கைது செய்தனர். தேனி சுக்குவாடன்பட்டியில், 'தமிழ்நாடு அக்ரோ புரோபோஸ் நிதி லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குனர்களாக திருப்பூரை சேர்ந்த சரண்யாதேவி, சரவணன், பாலகுமார், தனபால் உள்ளனர். தேனியை சேர்ந்த மணிகண்டன் மேலாளராகவும், அவரது மனைவி கார்த்திகா கணக்காளராகவும், பெரியகுளம் விஜயன், ராமகிருஷ்ணன் களப்பணியாளராகவும் பணிபுரிந்தனர். இந் நிலையில் வடபுதுப்பட்டி முனியாண்டி கோயில் தெரு பிரேமா 38,விடம் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள், 'எங்கள் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால்கூடுதல் லாபம் தரப்படும்,' என்றனர். அதை நம்பிய பிரேமா பல தவணைகளில் ரூ.73.50 லட்சத்தை முதலீடு செய்தார். முதிர்வு காலம் முடிந்ததும், பிரேமா பணத்தை திருப்பிக் கேட்ட போது மேலாளர் மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்தார். பிரேமா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த நிறுவனம் மேலும் ஏழு பேரிடம் டிபாசிட்டாக ரூ. 26 லட்சம் பெற்று மொத்தம் ரூ.99.50 லட்சம் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நிதி நிறுவன இயக்குனர்கள் உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ.,பாஸ்கரன் ஆகியோர் வழக்குப் பதிந்தனர். நிதி நிறுவனத்தின் இயக்குனராக இருந்ததிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தபாலகுமார், திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த தனபால், மேலாளர் மணிகண்டன் உட்பட3 பேர் 2024ல் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குனர்சரண்யாதேவியை நேற்று கைது செய்தனர்.