மாணவர்களுக்கு பண்ணைகளில் கள பயிற்சி
தேனி: தேனியில் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண் படிக்கும் மாணவர்களுக்கு வயல்கள், பட்டுப்புழு வளர்ப்பு மையங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவுகளான வேளாண், மெக்கானிக், நர்சிங், எலக்டரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு களபயிற்சி வழங்கப்படுகிறது. வீரபாண்டி, கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேளாண் படிக்கும் மாணவர்கள் தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு பயிற்சிகள் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்டது. அணைக்கரைப்பட்டி தென்னை ஒட்டு மையம், போடி காபி, ஸ்பைசஸ் வாரியங்களில் அலுவலர்கள் நேரடி செயல்விளக்க பயிற்சி அளித்தனர். பயிற்சிகளை தலைமை ஆசிரியர்கள் தேன்மொழி, சத்தியபாமா தலைமையில் தொழிற்கல்வி ஆசிரியர் மகேந்திரன், பயிற்றுனர் பிரியதர்ஷினி ஒருங்கிணைத்தனர்.