குடும்ப தகராறில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவர் * மனைவி, இரு மகள்களுக்கு தீவிர சிகிச்சை
கடமலைக்குண்டு:தேனி கடமலைக்குண்டு அருகே குடும்பத் தகராறில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த கணவர் உடல் கருகி நிலையில், அருகில் இருந்த மனைவி, இரு பெண் குழந்தைகளின் உடல்களிலும் தீ காயங்கள் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.கடமலைக்குண்டு அருகே நரியூத்தை சேர்ந்தவர் மாரிமுத்து 35. மயிலாடும்பாறை ஹோட்டல் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனா 25. இத்தம்பதிக்கு அக்சயா 8, அபிநயா 4, என 2 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி கருத்து வேறுபாடால், தகராறு நடந்துள்ளது. நேற்று மதியம் மீண்டும் ஏற்பட்ட தகராறால், மனம் வெறுத்த கணவர் மாரிமுத்து திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி மனைவியிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். அப்போது தீக்குச்சியை பற்ற வைத்ததும், சட்டென மாரிமுத்து உடலில் தீ பற்றி எரிந்து, உடலில் தீ பரவியது. அருகில் இருந்த மனைவி மீனா மீதும் தீப்பிடித்தது. வீட்டிற்குள் இருந்த 2 பெண் சிறுமிகள் அருகில் வந்ததும், அவர்கள் உடல்களின் மீதும் தீ காயங்கள் ஏற்பட்டன. இதனால் அலறின. இந்த சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்தனர். மாரிமுத்து உடல் முழுவதும் கருகிய நிலையில் மயங்கி விழுந்தார். மீனாவிற்கு வயிறு முதல் கால் வரை உடல் கருகி விட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். சம்பவம் இடம் சென்ற போலீசார் காயமடைந்த நான்கு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 60 சதவீத தீக்காயங்களுடன் மனைவி மீனா, சிறு காயங்களுடன் இரு சிறுமிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.