கூடுதல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க வலியுறுத்தல்
கம்பம்: காசநோயை கண்டறிந்து சிகிச்சையளிக்க வசதியாக கூடுதலாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் காசநோய் தடுப்பு பிரிவினர் காசநோய் கண்டறியும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமந்தோறும் சென்று எக்ஸ்ரே எடுத்து, காசநோய் கண்டறிந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று 20 முதல் 30 பேர்களுக்கு எக்ஸ் ரே எடுத்து வருகிறது. அவர்களிடம் சளி சேகரம் செய்து பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சர்க்கரை, ரத்த அழுத்தம் பாதித்தவர்களையும் டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் அவர்களுக்கு காசநோய் உள்ளதா என்பதை கண்டறிந்து வருகின்றனர். இதனால் பணிப் பளு அதிகாரித்துள்ளது. கூடுதலாக ஒரு வாகனத்தை அனுமதித்தால் பணிகள் எளிதாகும். அரசு மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அனுமதிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவி இருந்தால், நடமாடும் வாகனங்களுக்கும் பணிப் பளு குறையும், எனவே கூடுதலாக ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும், அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவிகளும் வைக்க மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.