உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒரு ஆசிரியர்களுடன் இயங்கும் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள்; கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

ஒரு ஆசிரியர்களுடன் இயங்கும் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள்; கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

தேனி : மாவட்டத்தில் ஒரு ஆசிரியர்களுடன் 12 கள்ளர் தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன.தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் கள்ளர் சீரமைப்புத் துறையால் மொத்தம் 290க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் 62 தொடக்கப் பள்ளிகள், 6 நடுநிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள், பத்து மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 83 பள்ளிகள் இயங்குகின்றன. தொடக்கப்பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. அதே சமயம் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.ஆனால் மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் தேவாரம், அப்பிபட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, பூசாரிகவுண்டன்பட்டி, எழுவம்பட்டி, உப்புக்கோட்டை, கன்னியம்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், பெரியகுளம் தாலுகாவில் தேவதானப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள கள்ளர் தொடக்கப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர்.ஒரு ஆசிரியர் மட்டும் உள்ளதால் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒரே ஆசிரியர் அனைத்து வகுப்புகளையும், நிர்வாக பணிகளையும், பிற பணிகளையும் கவனிக்கும் சூழல் உள்ளது. இது தவிர அவசர நேரங்களில் கூட விடுமுறை எடுக்க முடியாத நிலை உள்ளது. செயல்படுகின்ற ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்த பட்சம் இரு ஆசிரியர்கள் இருப்பதை கள்ளர் சீரமைப்புத்துறை உறுதி செய்ய மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை