பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி திருவிழா
கூடலுார் : பெருமாள் கோயிலில் நடந்த கூடாரவல்லி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.பழமை வாய்ந்த கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி 27ம் நாளான நேற்று கூடாரவல்லி உற்ஸவ விழா விமர்சையாக நடந்தது. கூடலழகிய பெருமாள், ஆண்டாள் உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெருமாள், ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் திருவம்பாவை, திருப்பாவை பாடினர். சுவாமி கூடலழகிய பெருமாளுக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இந்நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும், பிரிந்த தம்பதியர் கூடுவர் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். பொங்கல் பிரசாதம், உணவு, தாம்பூலம் வழங்கப்பட்டது.போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் பெருமாளுக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஆண்டாள், பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.