| ADDED : நவ 27, 2025 01:47 AM
ஆண்டிபட்டி: பன்றிகளை வேட்டையாட டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி பொருட்களை பதுக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், புள்ளிமான்கோம்பையை சேர்ந்தவர் மணிகண்டன், 40, கூலித்தொழிலாளி. இவர், வெடி பொருட்கள் வைத்துள்ளதாக வி.ஏ.ஓ., ஷியாம்சுந்தருக்கு தகவல் கிடைத்தது. ஆண்டிபட்டி போலீசார் மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர் மணிகண்டன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஐந்து டெட்டனேட்டர்கள், வெடி மருந்து நிரப்பப்பட்ட எட்டு பூந்தொட்டிகள், இரு சணல் கயிறு ரோல்கள் இருந்தன. இவற்றை, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வீரக்கல் பகுதி கார்த்திக், முத்துராஜ், காமாட்சிபுரம் குன்னத்துப்பட்டி பிரமன் ஆகியோரிடம் வாங்கியதாக, அவர் விசாரணையில் கூறினார். மணிகண்டனை கைது செய்த போலீசார், டெட்டனேட்டர் உட்பட வெடிப் பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்த மூவரை தேடி வருகின்றனர்.