கூட்டுறவுத்துறை பயிர்களுக்கான கடன் தொகை நிர்ணயம் திசு வாழைக்கு ரூ.1.25 லட்சம் கடன் பெறலாம்
தேனி: மாவட்டத்தில் 2024-25ம் கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்களுக்கான பயிர்கடன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திசு வாழைக்கு ரூ.1.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கங்கள் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்கடன், நகை கடன், தொழில் முனைவோர் கடன் உள்ளிட்ட கடன் வசதிகள் செய்யப்பட்டள்ளன. ஒவ்வொரு பயிருக்கும் ஏக்கருக்கு எவ்வளவு கடன் தொகை வழங்குவது என்பது பற்றி கூட்டுறவுத்துறை முடிவு செய்யப்பட்டு, மதுரை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதன்படி ஒவ்வொரு பயிரிலும் பாசனம், மானாவரி என பிரித்து தனித்தனியாக கடன் தொகை நிர்ணயம் செய்துள்ளனர். ஒவ்வொரு பயிருக்கும் கடனை திருப்பி செலுத்தும் மாதத்தின் அளவும் மாறுபட்டுள்ளது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் திசு வாழைக்கு அதிகபட்சமாக ரூ.1.25லட்சம், வாழை ரூ.99ஆயிரம், திராட்சை ரூ.69,800, மாம்பழம் ரூ.25,100, ஏலக்காய் ரூ.67,200, வெங்காயம் ரூ.45,000, பெல்லாரி ரூ.31,600, நெல் ரூ.35,600, மரவள்ளிகிழங்கு ரூ.39,400, மக்காச்சோளம் ரூ.29,000, நிலக்கடலை ரூ.26,500 என 90க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.