கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் உயிருடன் மீட்பு
போடி : போடி தேனி ரோட்டில் ஒத்த வீடு பகுதியில் வசிப்பவர் தாஸ் 55. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அங்காளிஸ்வரி கோயில் அருகே அமைந்து உள்ளது. இப்பகுதியில் சுற்றித் திரிந்த ஆண் மயில் நேற்று எதிர்பாராமல் தடுமாறி தாஸ் தோட்ட கிணற்றில் விழுந்தது. இறக்கை நீரில் மூழ்கியதால் வெளியே வர முடியாத நிலையில் தத்தளித்தது. தாஸ் முயற்சித்தும் மயிலை வெளியேற்ற முடியவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற போடி தீயணைப்பு துறையினர் கிணற்று நீரில் சிக்கித் தவித்த ஆண் மயிலை உயிருடன் மீட்டனர். பின் அந்த மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.