பங்கு வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.2.52 கோடி மோசடி செய்தவர் கைது
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த 22 பேரிடம் பங்கு வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.2.52 கோடி பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மோசடி வழக்கு பதிந்து நிறுவன இயக்குனர் அகமது சபீரை 38, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சேக்முகமது 51. இவரது மூத்த சகோதரர் ஹக்கீம், அவருடைய மகன் அகமதுசபீர் 39, மருமகள் டாக்டர் சபியாபேகம் 36, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்தனர். அங்கு மூவரும் பங்கு வர்த்தக நிறுவனம் நடத்தினர். அதில் ஹக்கீம் நிர்வாக இயக்குனராகவும், அகமதுசபீர், சபியாபேகம் இயக்குனர்களாகவும் இருந்தனர். இந்நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபத் தொகையாக ரூ.33 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் வரை வழங்குவதாக கூறியுள்ளனர். இதுகுறித்த ஒரு விளம்பரத்தை சேக்முகமது அலைபேசியில் அனுப்பி வைத்தனர். இதனை நம்பி சேக்முகமது ரூ.25 லட்சம் முதலீடு செய்தார். அதன்பின் அவர்கள் மூவரும் மதுரை சதாசிவ நகரில் குடியேறினர். அங்கு மூவரும் இணைந்து மற்றொரு பங்கு வர்த்தக நிறுவனத்தை துவக்கினர். அதில் ரூ.1 லடசம் முதலீடு செய்தால் 45 நாட்களுக்கு தினமும் ரூ.900 வழங்கப்படும் எனவும், பின் முதலீட்டுப் பணம் முழுமையாக திரும்பி வழங்கப்படும் என்றனர். இதை நம்பி சேக்முகமது, உறவினர்கள் 20 பேர் தன்னிடம் வழங்கிய ரூ.1 கோடியே 67 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதன் பின் சேக்முகமதுவிற்கும், 20 பேருக்கும் சிறிய தொகையை அனுப்பிவிட்டு, மோசடி செய்தனர். இதுகுறித்து சேக்முகமது தனது அண்ணன் ஹக்கீம் உட்பட மூவர் மீது தென் மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் 2024 ஏப்ரலில் புகாரில் அளித்தார்.இந்நிலையில் பெரியகுளம் தென்கரையில் மளிகை கடை உரிமையாளர் சையதுசுல்தானிடம் 50, மூவரும் இணைந்து ரூ.60 லட்சம் பெற்று, பணம் தராமல் மோசடி செய்தனர். ஆக மொத்தம் 22 பேரிடம் ரூ.2.52 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். ஐ.ஜி., உத்தரவில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., லதா ஆகியோர் ஹக்கீம், அகமதுசபீர், சபியாபேகம் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, ஐதராபாத் சென்று அகமதுசபீரை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.