உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில்களுக்கு பூட்டு தேவையின்றி வருவதை தடுக்க நடவடிக்கை

தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில்களுக்கு பூட்டு தேவையின்றி வருவதை தடுக்க நடவடிக்கை

தேனி: 'தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருபுற நுழைவாயில்களும் நேற்று பூட்டப்பட்டன. தொடர் விடுமுறை, தேவையின்றி வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் வழியாக பயணிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன் தெரிவித்தார்.தேனி கலெக்டர் அலுவலகம் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு தெற்கு, வடக்குப் புறத்தில் இரு நுழைவாயில்கள் உள்ளன. தற்போது நகர் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்டச்சாலை வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளன. ஆனால், பல வாகன ஓட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தை பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதனால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் நாட்கள், பிற நாட்களில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது தொடர்கதையானது. சிலர் வளாகத்தில் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர்.ஓராண்டிற்கு முன்பே தினமும் வடக்குபுற நுழைவாயிலை இரவில் மூடி வைப்பதற்கு அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தின் இரு நுழைவாயில்களும் பூட்டப்பட்டன. அந்த வழியாக செல்ல நினைத்த வாகன ஓட்டிகள் கருவேல்நாயக்கன்பட்டி வழியாகவும், சிலர் வந்த வழியிலும் திருப்பிச் சென்றனர். இதுகுறித்து பி.ஏ.ஜி., முத்துமாதவன் கூறுகையில், 'கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேவையின்றி யாரும் வந்து செல்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை