போடி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மின் விசிறி விழுந்ததில் தாயும், சேயும் தப்பினர்
போடி:தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் நேற்று இரவு மின் விசிறி கழன்று விழுந்ததில் கட்டிலில் அமர்ந்து பாலுாட்டி கொண்டிருந்த பீரவீனா 28,வும் சேயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.போடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1800 புற நோயாளிகளும், 100 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு மின் வயரிங் செய்து 60 ஆண்டுகளுக்கு மேலானதால் அலுமினிய வயர் அடிக்கடி உரசி மின்தடை ஏற்படுகிறது. மின் தடையால் சில நேரம் மகப்பேறு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிர் பலியாகும் அபாயம் ஏற்படுகிறது. ஜெனரேட்டர் வசதி இருந்தும் வயரிங் பழுதால் பயன்படுத்த முடிவதில்லை. போடி ஜே.கே., பட்டியை சேர்ந்தவர் பிரவீனா 28.விற்கு நேற்று முன்தினம் போடி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஆப்பரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு பிரசவ வார்டு கட்டிலில் குழந்தைக்கு பாலுாட்டி கொண்டிருந்தார். கட்டிலுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி போல்ட் கழன்று சத்தம் வேகமாக கேட்டுள்ளது. மேலே பார்த்த போது மின்விசிறி கழன்று கீழே விழுவது அறிந்து சுதாரித்த பிரவீனா குழந்தையை துாக்கி கொண்டு எழுந்து விட்டார். கண் இமைக்கும் நேரத்தில் மின்விசிறி கட்டிலில் விழுந்தது. அருகே இருந்தவர்கள் அலறியபடி அறைய விட்டு ஓடினர். அப்போது மின்சாரம் தடைபட்டதால் பிரசவ வார்டு முழுவதும் இருளில் மூழ்கியது. டார்ச் லைட் வெளிச்சத்தின் மூலம் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். எலக்ட்ரீசியனை வரவழைத்து சரி செய்த பின் பிரசவ வார்டு வெளிச்சத்திற்கு வந்தது.