உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய ஆடு வளர்ப்பு திட்டத்தில் ரூ. ஒரு கோடி வரை கடன் அனுமதி: கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பேட்டி

தேசிய ஆடு வளர்ப்பு திட்டத்தில் ரூ. ஒரு கோடி வரை கடன் அனுமதி: கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பேட்டி

'தேசிய கால்நடை இயக்க ஆடு வளர்ப்பு திட்டத்தில் ரூ.1 கோடி வரை கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மகளிர் குழுவினர் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர்,' என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா தெரிவித்துள்ளார். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில் ராஜா தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:

நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டம் பற்றி

நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தில் 250 நாட்டுக்கோழிகள் அடங்கிய ஒரு பண்ணை அமைக்க பயனாளிக்கு ரூ.ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 625 மானியம் வழங்கப்படும்.இதே அளவில் விவசாயி பங்களிப்பு தொகை வழங்கிட வேண்டும். இதில் கோழிக்குஞ்சுகள், தீவனம், கொட்டகை, குஞ்சுப் பொரிப்பான், பண்ணை உபகரணங்கள் வாங்கி வருவாய் ஈட்டலாம். இதற்கு தகுதியானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவிவசாயிகள். ஊரக பகுதி பயனாளிகள் மட்டும் திட்டத்தில் இணையலாம். பயனாளி குறைந்தபட்சம் 625 சதுர அடி இடம் அவரது சொத்த இடமாகவோ, குத்தகை இடமாகவோ வைத்திருப்பது கட்டாயம்.

தேசிய கால்நடை இயக்கத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளதா

நடைமுறையில் உள்ளது. அத்திட்டத்தில் 1000 நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கு ரூ.40 லட்சம் திட்டத் தொகை வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதம் பயனாளிகள் பங்களிப்பு. மீதமுள்ள ரூ.18 லட்சம் மத்திய அரசு மானியமாகவும், அடுத்த ரூ.18 லட்சம் வங்கிக்கடனாகவும் பெற்றுத்தருகிறோம். இதில் பயனாளிகளுக்கான வரையறை கிடையாது. 18 வயது நிரம்பிய யாரும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் உள்ள UDAYAMI Mitra.portal என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதில் வங்கிக்கடன் வழங்க இசைந்துள்ளது ஆவணம், இதர விபரங்கள் ஆதார், பான் கார்டு, வங்கி ஆவணங்கள் பதிவேற்றம் செய்தால், பரிசீலனை, அதிகாரிகளுக்கு ஆய்வுக்கு பின் 2 மாதங்களில் மானியம் வழங்கஒப்புதல் கிடைத்துவிடும். பின், மூன்று தவணைகளில் மானியம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ஆண்டு முழுவதும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 40 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேவாரத்தில் ஒரு பயனாளி பன்றி வளர்த்து வருகிறார்.

தேசிய கால்நடை இயக்கத்தின் ஆடு வளர்க்க மானியம் வழங்கப்படுகிறதா

வெள்ளாடு வளர்ப்பு திட்டத்தில் 100 ஆடுகள், 200, 300, 400, 500 என எண்ணிக்கைக்கு ஏற்ப 5 வகை ஆடுவளர்ப்புத் திட்டங்கள் உள்ளன. இதில் 500 ஆடுகள் வளர்க்க ரூ.1 கோடி வரை ஒப்புதல் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு 100 ஆடுகள் வளர்க்கும் பண்ணை ஆரம்பிக்க பயனாளிக்கு ரூ.20 லட்சம் திட்ட அறிக்கை சமர்பித்து. ரூ.2 லட்சம் பயனாளிகள் பங்களிப்பு தொகை வழங்க வேண்டும். மீதியுள்ள ரூ.18 லட்சத்தில் ரூ.9 லட்சம் மத்திய அரசின் மானியமாகவும், மீதமுள்ள ரூ.9 லட்சம் வங்கிக்கடனாக வழங்கப்படும். மாவட்டத்தில் அதிகளவு பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 100 ஆடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். தீவன உற்பத்திக்காக, ஏக்கரின் அளவு, ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக வைத்திருப்பது அவசியம். மகளிர் குழு பயனாளிகள் 200 ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு ஆட்டு இனங்களை வளர்க்கப்படுகிறதா

மகளிர் குழுக்களில் வாழ்வாதார மேம்பாடு அடைய கிராமப்புற பெண்கள் சிறு தொழில் பெரும் பங்கு வகிக்கிறது.அதில் ஒரு பகுதிதான் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் ஆடு வளர்ப்பு இதில் கொடி ஆடுகள், கன்னி ஆடுகள் வளர்க்கும் போது அதிக வருவாய் ஈட்ட முடியம். அவை நம் நாட்டின ஆடுகள். மாறாக வெளிநாட்டு ஆடுகள் வளர்க்க அனுமதி கிடையாது.

மானியம் பயனாளிகளுக்கு எத்தனை நாட்களில் கிடைக்கும்.

மாநில திட்ட அதிகாரி, மத்திய திட்ட அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்த, பின் 3 மாதங்களில் மானியத் தொகை பயனாளிகள் நேரடியாக வரவு வைக்கப்படும். அதிக ஈடுபாட்டுடன் தொழில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது அருமையான வாய்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !