தேசிய சுகாதார இயக்கத்தின் முஸ்கான் திட்டம்...செயலிழந்தது: அரசு மருத்துவமனைகளில் ஆய்வு அவசியம்
கம்பம்: ''கம்பம் அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவுக்காக துவக்கப்பட்ட தேசிய சுகாதார இயக்கத்தின், 'முஸ்கான்' திட்டம் செயலிழந்து விட்டதால், இதனை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்து, செயல்படுத்தி, குழந்தைகளின் சிகிச்சைகளை மேம்படுத்த வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பச்சிளங்குழந்தைகள் பிறந்த நாள் முதல் 12 வயது வரை குறிப்பாக வளரிளம் பருவம் வரை சிறப்பான சிகிச்சை அளிக்கும், 'முஸ்கான்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிசிச்சை பிரிவு, ஊட்டச்சத்து, 'ரிகாபிலேசன்' பிரிவு ஆகிய நான்கு பிரிவுகள் அமைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் கம்பம், போடி அரசு மருத்துவமனைகள், பெரியகுளம் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் துவக்கப்பட்டது. இந்த மருத்துவமனைகளில் உள்ள இப்பிரிவுகளை மாநில அளவிலும், தேசிய அளவிலும் குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ், ஊக்கத் தொகை தருவது வழக்கம். சிறப்பான சிகிச்சை, உட்கட்டமைப்பில் தேர்வு செய்யப்படும் மருந்துவமனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும். மாவட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த தொகையில் 25 சதவீதத்தை இப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுவது உண்டு. குழந்தைகள் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தவே இந்த திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் கம்பம் அரசு மருத்துவமனையில் இந்த 'முஸ்கான்' திட்டத்தில் போதிய கவனம் செலுத்தாத நிலையில் திட்டம் செயலிழந்து விட்டது. பல பெற்றோர்கள், 'நலப்பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.