| ADDED : ஜூலை 23, 2011 10:40 PM
தேனி : குச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர அறநிலையதுறை முன்வர வேண்டும். குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் முல்லை பெரியாற்று கால்வாயில் (சுரபி நதி)நீராடுகின்றனர். இப்பகுதியில் கால்வாயை அகலப்படுத்தவும், நீராட வசதியாக அப்பகுதி முழுவதும் படித்துறைகள் அமைத்தும் தர வேண்டும். படித்துறை வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர். பெண்களுக்கான உடைமாற்றும் அறைகள் தேவை. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும்.
கோயில் நிர்வாக அலுவலர் ராஜேந்திர குமார் கூறியதாவது: திருவிழா முடிந்ததும், 20 லட்சம் ரூபாயில் கோயில் மண்டபம் கட்டப்பட உள்ளது. சுற்றுலாத்துறை நிதி உதவியில், 30 லட்சம் ரூபாயில் முகப்பு மண்டபம் கட்டவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதிகள், படித்துறை அமைக்க நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.