அரசு பஸ்கள் பராமரிப்பு இன்றி இயக்குவதால் பயணிகள் அவதி! கழிவு ஆயிலை திரும்ப பயன்படுத்துவதால் இன்ஜின் பழுதாகும் நிலை
போடி; மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில் முறையான பராமரிபு இன்றி இயக்குவதால் அதிக புகையுடன் சென்று பாதியிலே நின்று விடுகின்றன. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். தேனி, பெரியகுளம், தேவாரம், கம்பம், லோயர்கேம்ப் பகுதி அரசு பஸ் டெப்போக்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் கிராம மார்க்கமாக செல்லும் டவுன் பஸ்கள் 117, தொலை தூர பஸ்கள் 272 என மொத்தம் 389 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போடி 13, தேவாரம் 4 உட்பட மாவட்டத்தில் புதிதாக 45 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுத்தம் செய்யாத பஸ்கள் பஸ் டெப்போக்களில் பஸ்கள் சுத்தப்படுத்த கிளீனர்கள் இல்லாததால் தற்காலிக கிளீனர்களே உள்ளனர். இதனால் புதிய பஸ்கள் தவிர பழைய பஸ்கள் சுத்தம் செய்வது இல்லை. சில டெப்போக்களில் 3 முதல் 5 நபர்கள் மட்டுமே உள்ளனர். நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பஸ்கள் சுத்தப் செய்கின்றனர். மற்ற பஸ்களை சுத்தம் செய்வது இல்லை. கிளீனர்களுக்கு சம்பளம் குறைவு என்பதால் பணியில் ஆர்வம் காட்டுவது இல்லை. மலைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் வாந்தி எடுப்பதை கூட சுத்தம் செய்யாமல் இயக்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. போடி, தேனியில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்காததால் சில மாதங்களுக்கு முன்பு இன்ஜின்களுக்கு கழிவு ஆயில் ஊற்றி இயக்கியதால் பஸ்சில் பிஸ்டன், ரிங்ஸ் தேய்மானம் ஏற்பட்டு உள்ளன. இதனால் பஸ்கள் ஸ்டார்ட் செய்யும் போது அதிக புகையாக வெளியேறும். இதனை சுவாசிக்கும் பயணிகள் பாதிக்கின்றனர். சில பஸ்களில் டர்போ சார்ஜர் பழுது காரணமாக பாதியிலே நின்று விடுகிறது. அப்போது பயணிகளை பாதியிலே இறக்கிவிட வேண்டிய நிலையில் டிரைவர், கண்டக்டர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான பஸ்களில் பயணிகள் இருக்கைகள் சேதம் அடைந்தும், சீட் கவர்கள் கிழிந்தும், பக்கவாட்டு கம்பி, தகடுகள் வெளியே நீட்டி உள்ளதால் பயணிகளை காயம் அடைகின்றனர். டிரைவர் சீட்டுகள் பழுதாகி உள்ளதால் அதில் அமர்ந்து பஸ்களை இயக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். அரசு பஸ்களை சுத்தம் செய்தும், தேய்மானம் அடைந்த பொருட்களை மாற்றி, பழுது நீக்கம் செய்து புகையில்லா பஸ்களாக இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.