திருமணமான இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை பெரியகுளம் சப்-கலெக்டர் விசாரணை
சின்னமனுார்: சின்னமனுார் அருகே அய்யம்பட்டியில் திருமணமான 2 ஆண்டுகளில் இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் விசாரணை நடத்தினார்.சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிழக்கு தெரு முத்துராஜா மகள் அவனிகா 20. இவருக்கும் இதே ஊரை சேர்ந்த கருப்பையாவுக்கும் 24, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் அதே ஊரை சேர்ந்த ஒருவருடன் அவனிகா கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதை கணவரும், தந்தையும் கண்டித்துள்ளனர். இருந்த போதும் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.இந்நிலையில் நேற்று அவனிகா வீட்டில் தனியாக இருந்த போது, கள்ளக் காதலன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், இருவரையும் வீட்டிற்குள் வைத்து வெளியில் கதவை பூட்டியுள்ளார்.பின்னர் சத்தம் போட்டு ஊரில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து விட்டுள்ளார். தன் மானம் போய்விடும் என்று பயந்த அவனிகா வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துாக்கிட்டு இறந்த பெண்ணின் தாய் நவநீதா புகாரில் சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் விசாரித்தார்.