உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மருத்துவமனைகளில் இறந்த உடல்களை பாதுகாக்க ப்ரீசர் பாக்ஸ் வாடகைக்கு வாங்க வேண்டிய அவல நிலை

அரசு மருத்துவமனைகளில் இறந்த உடல்களை பாதுகாக்க ப்ரீசர் பாக்ஸ் வாடகைக்கு வாங்க வேண்டிய அவல நிலை

போடி : தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க குளிர்சாதன பெட்டி இல்லாததால் தனியாரிடம் வாடகைக்கு பெற்ற கூடுதல் பணம் செலவு செய்திட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. போடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1800 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இதில் 100 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். கேரளா, போடிமெட்டு மலைப்பாதை, போடி பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளில் காயம் அடைந்தோர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். சிலர் சிகிச்சை பலன் இன்றி இறக்கின்றனர். விபத்து, உடல் சிதைவு, கொலை, தற்கொலையில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வரும் வரை பாதுகாக்க வேண்டியுள்ளது. மாலை 5 மணிக்கு மேல் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்வது இல்லை. அதுவரை உடல்கள் பாதுகாத்திட வேண்டும். போடி அரசு மருத்துவமனையில் பிணவறையில் குளிர்சாதன வசதி இல்லை. இதனால் உடல்களை பாதுகாக்க இறந்தவரின் குடும்பத்தினர் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டி (ப்ரீசர்) வாடகைக்கு பெற்று உடலை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு வாடகையாக குறைந்தது நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை செலவு செய்திட வேண்டியுள்ளது. கூடுதல் நாட்கள் மேலும் பல ஆயிரம் செலவிடும் நிலை உள்ளது. வசதியற்ற ஏழை, எளியவர்கள் குளிர்சாதன பெட்டிக்கு வாடகை வழங்க முடியாமல் தவிப்பு அடைந்து வருகின்றனர். இதே நிலைதான் பெரியகுளம், தேனி, கம்பம், ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தம பாளையம் அரசு தாலுகா மருத்துவமனைகளில் குளிர்சாதன பெட்டி வசதி இல்லை. இதனால் இறந்த நபர்களின் உடல்களை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அடையாளம் தெரியாத சடலங்களை தேனி மருத்துவகல்லுாரிக்கு அவசர, அவசரமாக அனுப்ப வேண்டியுள்ளது. இச் சூழலால் டாக்டர்கள், போலீசார், உறவினர்கள் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க குளிர்சாதன பெட்டி வழங்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் வழங்கிட முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ