உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி மலைப்பாதையில் மீண்டும் குவியும் பாலிதீன் கழிவுகள் - தொடர் கண்காணிப்பு இல்லாததால் சுகாதாரக் கேடு

குமுளி மலைப்பாதையில் மீண்டும் குவியும் பாலிதீன் கழிவுகள் - தொடர் கண்காணிப்பு இல்லாததால் சுகாதாரக் கேடு

கூடலுார் : குமுளி மலைப்பாதையில் வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பாலிதீன் கழிவுகள், குப்பை குவிகிறது. தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப் பாதையும் ஒன்றாகும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ., தூர மலைப்பாதை வனப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவில் பொது இடங்களில் பாலிதீன் கழிவுகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் கூடுதல் அபராதம் விதிக்கின்றனர். இதனால் குமுளிமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேகரமாகும் பாலிதீன் கழிவுகள் தமிழக வனப்பாதையான குமுளி மலைப் பாதையில் கொட்டுவது தொடர்ந்துள்ளது. சில நேரங்களில் மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுகிறது. வனப்பகுதியில் மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் என பாலிதீன் கழிவுகளை உண்பதால் உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. மலைப்பாதையின் கிழக்குப் பகுதி கூடலுார் வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், மேற்குப் பகுதி கம்பம் மேற்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மலைப்பாதையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் குப்பை யார் அகற்றுவது என்ற குழப்பமும் நீண்ட நாட்களாக உள்ளது. அதேபோல் வனப்பகுதியில் உள்ள குப்பை நகராட்சி நிர்வாகமும் அகற்ற தயக்கம் காட்டி வருகிறது. கடந்த வாரம் மலைப் பாதையில் வனத்துறையினர், பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் இணைந்து பாலிதீன் அகற்றும் பணியை செய்தனர். ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் பாலிதீன் கழிவுகள் குவிந்துள்ளன. கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து அனுமதிக்க வேண்டுமெனதொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த போதிலும் வனத்துறையினர் கண்டுகொள்ளாததால் குமுளி மலை பாதையில் சுகாதாரக் கேடும் தொடர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை