மாட்டுபட்டி அணையில் விமானம் இயக்க எதிர்ப்பு
மூணாறு: மாட்டுபட்டி அணையில் கடல் விமானம் இயக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் களம் இறங்கினர்.மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்குள்ள அரசு சார்பிலான மாட்டுபண்ணைக்கு பசுக்களின் தீவனத்திற்கு அணையின் கரையோரம் 600 எக்டேரில் புல் வளர்க்கப்படுகிறது. அவை ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் என்பதால் காட்டுயானைகள் தீவனத்திற்கு நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம். இந்நிலையில் கொச்சி, மாட்டுபட்டி அணை இடையே கடல் விமானம் இயக்க திட்டமிட்டு, அதன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் களம் இறங்கினர்.மாட்டுபட்டி அணை காட்டு யானைகள் உள்பட வன விலங்குகள் வசிப்பிடம் என்பதால் கடல் விமான சேவையை நிறுத்துமாறு தொடுபுழாவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் ஜெயசந்திரன் வன உயிரின தலைமை பாதுகாவலரிடம் புகார் அளித்தார். தவிர தேசிய பூங்கா, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் எனவும் புகாரில் கூறியுள்ளார்.இந்நிலையில் கடல் விமானத்தை நேற்று வரவேற்று நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறுகையில்,' கடல் விமானம் இயக்குவதற்கு எழும் எதிப்புகள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் சாதாரண மக்கள் பயனடையும் வகையில் அரசு ஆலோசித்து வருகிறது', என்றார்.