முதல்வர் காப்பீட்டு திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தயக்கம்
தேனி: முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் அரசு மருத்துவமனையில் கூட பணம் செலுத்தி ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கும் நிலைக்கு பொது மக்கள் ஆளாகி யுள்ளனர். தமிழகத்தில் மாநில அரசு சார்பில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து அதற்கான அடையாள அட்டை குடும்பத் தலைவர் பெயரில் வழங்கப்படுகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி ஒரு குடும்பத்தினர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். ஆனால், இத்திட்டம் பற்றி சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுவது இல்லை. இதனால் பொது மக்கள் பலருக்கு இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் அரசு மருத்துவமனைகளில் கூட பணம் செலுத்தி ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கும் பரிதாப நிலை தொடர்கிறது. இத்திட்டம் பற்றி கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதி பொது மக்களும் பயன் பெறும் வகையில் அரசு துறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் எவ்வாறு விண்ணப்பிப்பது, அதன் பயன்கள் பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.