பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை
தேனி: மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா, மருத்துவம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகம் வந்து செல்கின்றனர். கேரளாவிற்கு சுற்றுலா செல்வோர் தேனி வழியாக செல்கின்றனர். கேரளாவில் இருந்து பலரும் சிகிச்சைக்காக தேனி வருகின்றனர். பலரும் பஸ்களில் மாவட்டத்திற்கு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலும் தரமற்ற, சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தேனி கர்னல் ஜான்பென்னி குவிக்கு பஸ் ஸ்டாண்டில் பல கடைகளில் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி சுற்றி உள்ள உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பை அதிகரிக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய உணவுப்பாதுகாப்புத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு முறை ஆய்வு செய்தால் பல மாதங்களுக்கு அதிகாரிகள் அந்த பகுதிகளில் ஆய்வு செய்வதில்லை. இதனால் ஆய்வு செய்த மறுநாளே பிளாஸ்டிக், காலாவதி பொருட்கள் விற்பனை தொடர்கிறது. காலாவதி, தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை அடிக்கடி கண்காணித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.