| ADDED : மார் 02, 2024 04:34 AM
கம்பம் : கம்பம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி கடைகளை மீண்டும் மூடி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இங்கு நகராட்சிக்கு சொந்தமான 28 கடைகளை மாத வாடகையில் வியாபாரிகள் ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி கடந்தாண்டு பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ்களை ஒரு வழிப்பாதையில் செல்ல அறிவித்தனர். இதனால் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு அதிகளவில் வருவதில்லை.இதனால் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு வியாபாரம் பாதித்தது. இதனால் கடைகளை மூடி பிப். 28 ல் போராட்டம் நடத்தினர். கடந்த ஜூனிலும் இதே போன்று போராட்டம் நடத்தினார்கள். இப் பிரச்னை தொடர்பாக சில நாட்களுக்கு முன் நகராட்சி தலைவர் வனிதா தலைமையில், கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.இதில் வெளியில் இருந்து வரும் வாகனங்கள் டிராபிக் சிக்னல் வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டும். பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் வாகனங்கள் அமராவதி தியேட்டர், காளியம்மன் கோயில் வழியாக செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் டிராபிக் சிக்னல், பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பஸ் நிறுத்தம் இருக்க கூடாது என்றும், அனைத்து வாகனங்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினார்கள். பஸ் ஸ்டாண்டிற்குள் உடனே குழாய் இணைப்பு வழங்கவும், சாக்கடை வசதி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளிக்கப்பட்டது.நகராட்சி சார்பில் பஸ் போக்குவரத்தை மாற்றுவது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாளர்,வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசினர். ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் போக்குவரத்தை மாற்றம் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை என கைவிரித்துள்ளனர். இந்த தகவல் தெரிந்தவுடன் கடைக்காரர்கள் நேற்று காலை மீண்டும் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை ஏற்காத வரை கடை அடைப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.