பின்தங்கிய வட்டாரம் மேம்படுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்திய தேனிக்கு விருது
தேனி: பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தேனிக்கு மாவட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய (போக்கஸ் பிளாக்) எனும் 50 வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த வட்டாரங்களில் 3 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள், சுகாதார மேம்பாடு, பள்ளி இடை நிற்றலை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம் கடந்தாண்டு செயல்பாட்டிற்கு வந்தது. கடந்தாண்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மதுரை, தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கான விருதை சென்னையில் நடந்த விழாவில் மாநில திட்டக்குழு செயல் துணைத்தலைவர் ஜெயரஞ்சனிடம், மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் பெற்றனர். மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியில் முருக்கோடை அரசுப் பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பில் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு கூடுதலாக தேங்காய், வெல்லம், நெய், பொட்டுக்கடலை கலந்த உணவுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் கூடுதல் கழிப்பறைகள், புதிய அங்கன்வாடி உள்ளிட்ட கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அந்த வட்டாரம் மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.எனவே, விருது கிடைத்துள்ளது என்றனர்.