உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை இல்லாததால் 3 கண்மாய் மீன் பாசி ஏலத்தில் ஆர்வமில்லை

மழை இல்லாததால் 3 கண்மாய் மீன் பாசி ஏலத்தில் ஆர்வமில்லை

பெரியகுளம்: பெரியகுளம் நீர்வளத்துறைக்கு உட்பட்ட 3 கண்மாய்களில் போதிய மழை இல்லாததால் மீன்பாசி ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட கண்மாய்களில், ஓராண்டிற்கான மீன் பாசி குத்தகை ஏலம் நேற்று நீர்வளத்துறை உதவிபொறியாளர்கள் கமலக்கண்ணன், மனோஜ் குமார் மேற்பார்வையில் அலுவலகத்தில் நடந்தது. அக். 7 ல் முதல் கட்டமாக 5 கண்மாய்கள் மீன்பாசி குத்தகை ஏலம் நடந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்டமாக 6 கண்மாய்கள் ஏலத்தில் விடப்பட்டது. இதில் நந்தியாபுரம் கண்மாய் ரூ.34,500, பொட்டக்குளம் ரூ.24 ஆயிரம், நாரணன்குளம் கண்மாய் ரூ.20,500 என ஏலம் எடுக்கப்பட்டது. இதில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் காரணமாக லக்கியம்பட்டி கண்மாய்,பொட்ட வண்ணான் குளம், ஒட்டாங்குளத்தில் தண்ணீர் இல்லாததால் இந்த மூன்று கண்மாய்களை ஏலம் எடுக்க யாரும் வரவில்லை. ஏலம்விடுபவர் 'கூவி கூவி' அழைத்தும் பலனில்லை. இதனால் நீர்வளத்துறை 3 கண்மாய்கள் ஏலத்தையும், அடுத்த கண்மாய் ஏலத்துடன் சேர்த்து விடுவதற்கு முடிவு செய்துள்ளது. ஏலம் விடப்பட்ட 3 கண்மாய்களும் கடந்தாண்டை விட 5 சதவீதம் மட்டும் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !