மக்களை அச்சுறுத்திய புலி என்கவுன்டர்
கூடலுார்; வண்டிப்பெரியாறில் சில நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலியை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.கேரளா, வண்டிப்பெரியாறு அருகே கிராம்பி குடியிருப்பு பகுதிகளில் சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்தது. பசு, நாய் உள்ளிட்ட வீட்டு விலங்குகளை புலி அடித்துக் கொன்றது. மக்கள் அச்சத்தில் இருந்தனர்.எருமேலி ரேஞ்சர் ஹரிலால் தலைமையில் வனத்துறையினர் தனிப்படை அமைத்து கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர்.நேற்று அதிகாலை கிராம்பி குடியிருப்பில் வீட்டிற்கு முன் இருந்த பசு மற்றும் நாயை புலி கொன்றது. தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு மயக்க ஊசி போட்டு புலியை பிடிக்க முயன்றனர்.திடீரென அப்பகுதிக்கு வந்த புலி வனத்துறையினரை தாக்க முயன்றது. உடனடியாக சுதாரித்த வனத்துறையினர், துப்பாக்கியால் புலியை சுட்டு பிடித்தனர்.சிறிது நேரத்தில் புலி இறந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.