உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுலா பயணிகளை மிரட்டி ரூ.90 ஆயிரம் லஞ்சம் கலால்துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

சுற்றுலா பயணிகளை மிரட்டி ரூ.90 ஆயிரம் லஞ்சம் கலால்துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

மூணாறு: கேரள மாநிலம் கொல்லம் பரவூரைச் சேர்ந்த நான்கு பேர் ஆக., 4 மூணாறு அருகே மறையூருக்கு சுற்றுலா சென்றனர். அவர்களை மறையூர் கலால் துறையினர் சோதனையிட்டனர். இதில் கஞ்சா பீடிகள் சிக்கின. அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்போவதாக கலால் துறை அதிகாரிகள் மிரட்டினர். பின் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கேட்டனர். சுற்றுலா பயணிகளில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் வழக்கு பதிவு செய்தால் வெளிநாடு திரும்பி செல்வதில் சிக்கல் ஏற்படும் என கருதி லஞ்சம் கொடுக்க முன்வந்தனர். மறையூர் கலால்துறை அலுவலகத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று ரூ.90 ஆயிரத்தை அதிகாரிகளிடம் வழங்கினர். அதனை பயணிகளில் ஒருவர் ரகசியமாக அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார். இதற்கிடையில் பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கலால் அதிகாரி ஒருவர் அலைபேசியை வாங்கி பரிசோதித்தார். அதில் அதிகாரிகள் பணம் வாங்கியது வீடியோவாக பதிவாகியிருந்தது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளில் ஒருவர் அலுவலகத்தில் இருந்து தப்பி விட்டார். வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தியரூ. ஒரு லட்சம் மதிப்பிலான அலைபேசியை பறித்துக் கொண்ட அதிகாரிகள் மீதமுள்ள மூவரையும் அனுப்பினர். சொந்த ஊர் திரும்பிய பயணிகள் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர். மறையூர் கலால் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையிட்டு விசாரித்தனர். அதில் பயணிகளிடம் இருந்து பறித்த அலைபேசி சிக்கவில்லை என்ற போதும், சம்பவம் உண்மை என தெரியவந்தது. இதுதொடர்பாக கலால் உதவி ஆய்வாளர் கிஷோர்குமார், அதிகாரி அருண் டி.நாயரை பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்து ஆணையர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை