வேளாண் கருவிகள் வாடகைக்குபெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள்
தேனி : நெல் அறுவடை, அதனை தொடர்ந்து வைக்கோல் கூட்டும், கட்டும் கருவிகள் தேவைக்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் பொறியியல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, போடி தாலுகாக்கலுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வேளாண் பொறியியல் துறை சார்பில் அறுவடை, வைக்கோல் கட்டும் கருவிகள் விவசாயிகள் வாடகைக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தேனி வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் முகுந்தன் கூறுகையில், 'உழவிற்கு தேவையான அனைத்து கருவிகளும் வாடகைக்கு வழங்குபவர்கள் பற்றிய விபரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் அறுவடை இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், மருந்து தெளிக்கும் ட்ரோன் உள்ளிட்டவை, அதனை இயக்குபவர்கள் பற்றிய தொடர்பு எண்களுடன் இடம் பெற்றுள்ளன. நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப கருவிகள், இயந்திரங்களை இச்செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தேனி அலுவலகத்தை 04546 251555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.