உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் பள்ளத்தாக்கு முதல் போகத்திற்கு பெரியாறு அணையில் இன்று நீர் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு முதல் போகத்திற்கு பெரியாறு அணையில் இன்று நீர் திறப்பு

கூடலுார்: கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று (ஜூன் 1) தண்ணீர் திறக்கப்படுகிறது.முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணையில் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியாக இருப்பதால் (மொத்த உயரம் 152 அடி) இன்று (ஜூன் 1) தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் இன்று தேக்கடி ஷட்டரில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் வீதம் முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 2024 ஜூன் 1ல் தண்ணீர் திறக்கும் போது அணை நீர்மட்டம் 119.10 அடியாக இருந்தது. இரு போக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்யும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஜூன் 1ல் தண்ணீர் திறப்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மட்டம்

பெரியாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 130 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6125 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4664 மில்லியன் கன அடியாகும். தேக்கடியில் 13.6 மி.மீ., பெரியாறில் 27.8 மி.மீ., மழை பதிவானது. அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்களில் தலா 42 வீதம் 126 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை