திருநெல்வேலி:திருநெல்வேலி துாய சவேரியார் தன்னாட்சி கல்லுாரியில், 4,000க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர்; 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். சுயநிதி முதுகலை சமூகவியல் துறைத்தலைவர் பால்ராஜ், 41, மற்றும் பேராசிரியர் செபாஸ்டின், 40, ஆகியோர் ஒரு பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ், மொபைல் போனில் ஒரு மாணவியை அழைத்து, 'பாருக்கு மது அருந்த வருகிறீர்களா?' எனக் கேட்டுள்ளார். அப்போது செபாஸ்டினும் மாணவியிடம் பேசியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர், திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் செய்தனர். சிட்டி போலீசார் சமரசம் பேசினர். மாணவிக்கு வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும் என புத்திமதி கூறினர். பின்னர் மாணவியை அழைத்து புகாரை வாபஸ் பெறும்படி செய்தனர்.ஆனால், இதுபற்றிய தகவல் வெளியாகி, ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகள், 'இப்பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என, அறிக்கை வெளியிட்டனர்.தென் மாவட்ட பிரச்னைகளை கவனிக்கும் ஏ.டி.ஜி.பி., ஒருவரின் உத்தரவின்படி, பேராசிரியர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். செபாஸ்டின் நேற்று கைது செய்யப்பட்டார். பால்ராஜ் தலைமறைவானார்.
ஏற்கனவே எச்சரித்த நிர்வாகம்
துாய சவேரியார் கல்லுாரி இருபாலர் பயிலும் கல்லுாரியாக மாறிய பின், அவ்வப்போது பாலியல் சீண்டல் புகார்கள் வருகின்றன. கல்லுாரி முதல்வர் காட்வின் ரூபஸ், பேராசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அதில், 'மாணவியரிடம் தவறாக பேசினாலும் பாலியல் பிரிவுகளில் கைதாக நேரிடும். பேராசிரியர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேராசிரியர் மீது புகார் நிரூபிக்கப்பட்டால் கல்லுாரி நிர்வாகம் பாதுகாக்காது' என, எச்சரித்தார். தற்போது வழக்கில் சிக்கியுள்ள இருவரும் சுயநிதிப் பிரிவில் பேராசிரியர்களாக பணியாற்றினர். பால்ராஜுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து உள்ளது. அதற்காகத்தான் அவர் சக பேராசிரியர்களுக்கு பாரில் விருந்து அளித்தார். இருவருக்கும் திருமணமாகி குடும்பங்கள் உள்ளன. போதையில் தவறாக பேசியதால் இருவரும் தற்போது சிக்கிக்கொண்டனர்.