மின்இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்
திருத்தணி,:திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி ஊராட்சிக்குட்பட்டது கொல்லகுப்பம் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 300 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்ததால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.இதையடுத்து ரேஷன் கடை அப்பகுதியில் உள்ள நுாலக கட்டடத்தில், கடந்த ஒன்பது மாதங்களாக இயங்கி வருகிறது. இதற்கிடையே, நுாலகம் அருகே, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின், 2023-24ம் ஆண்டின் கீழ், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக தானியம் சேமிப்பு மற்றும் ரேஷன் கடை கட்டடப்பட்டது.கடந்த மாதம், மாவட்ட நிர்வாகம் ஒப்புதலுடன் இக்கட்டடம் திறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ரேஷன் கடை நுாலகத்தில் தான் செயல்படுகிறது. இதற்கு காரணம் புதிய ரேஷன் கடைக்கு இதுவரை மின்இணைப்பு வழங்காமல் உள்ளதால், இந்த கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் புதியதாக திறக்கப்பட்ட ரேஷன் கடைக்கு விரைந்து மின்இணைப்பு வழங்குவதற்கு மின்வாரிய துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.