| ADDED : ஏப் 22, 2024 06:47 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருக பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர். நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை, திருமண முகூர்த்த நாள் மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் காலை, 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். கொளுத்தும் வெயிலிலும், மலைக்கோவில் தேர்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால், பொதுவழியில் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனைநடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வெள்ளிமயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.