திருத்தணியில் வரி வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், வீடுகளுக்கு சொத்து வரியும், வணிக வளாகங்களுக்கு தொழில் வரியும், காலிமனை வரியும் வசூலிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், நடப்பாண்டிற்கான வரி வசூல், வரும் 31ம் தேதி கடைசி நாள். ஆனால், பெரும்பாலானோர் வரி செலுத்தாமல் உள்ளனர். நகராட்சி அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வரி வசூல் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:வரி இனங்கள் வசூலிப்பதற்காக, ஐந்து குழுக்களாக பிரித்து, 21 வார்டுகளிலும் வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து வீடுகளுக்கு சென்று வசூலிக்கிறோம். மேலும், வரி செலுத்தும் உரிமையாளர்கள் மொபைல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி வரி செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.வரி செலுத்துவோர் வசதிக்காக, இம்மாதம் முழுதும் அனைத்து நாட்களும், காலை முதல் மாலை வரை வசூல் மையம் தொடர்ந்து செயல்படும். எனவே, வரி இனங்கள் செலுத்தாதோர், உடனடியாக செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.