சென்னை: ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, இரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.பள்ளிக்கு சிறுமி, ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு செல்ல சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார்.பள்ளியிலுள்ள மற்ற சிறுமியரை அழைத்துச் செல்ல ஆட்டோ டிரைவர் பள்ளிக்குள் சென்ற நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் அளித்த புகாரின்படி, உயர் நீதிமன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, பாரிமுனையைச் சேர்ந்த முருகன், 31, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கை, நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி,'குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், வாலிபருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.