உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பம் மாற்றாமல் அலட்சியம் பொன்னேரியில் சாலை பணி தாமதம்

மின்கம்பம் மாற்றாமல் அலட்சியம் பொன்னேரியில் சாலை பணி தாமதம்

பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அப்துல் அஜிஸ் தெருவில், மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. கம்பத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் தெரிகிறது. மேலும், ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.இந்த மின்கம்பம் பலத்த காற்று வீசினால், உடைந்து விழும் அபாய நிலை உள்ளது. இதனால், அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் உள்ளனர்.எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு மின்வாரியத்திடம் குடியிருப்புவாசிகள் தொடர்ந்து முறையிட்டதன் பயனாக, புதிய மின்கம்பம் கொண்டு வரப்பட்டு, அதே தெருவின் ஓரத்தில் இரண்டு மாதங்களாக பயனின்றி கிடக்கிறது.சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரியம் அலட்சியம் காட்டுவதாக, குடியிருப்புவாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.மேலும், அப்துல் அஜிஸ் தெருச்சாலையை புதுப்பிக்கவும், நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி உள்ளது. மின்கம்பம் மாற்றம் செய்யும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், தெருச்சாலையை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, பொன்னேரி மின்வாரியத்தினர் உடனடியாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி