பயணியருக்கு இடையூறாக நடைமேடை பெயர் பலகை
திருவாலங்காடு: சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது, திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் வழியாக தினமும், 270 புறநகர் ரயில்கள், சென்னை மூர்மார்க்கெட், கடற்கரை, அரக்கோணம், வேளச்சேரிக்கு சென்று வருகின்றன.திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் சென்னைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றாவது நடைமேடையில் கேட் அருகே, இரண்டு நடைமேடை பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒன்று பயணியருக்கு இடையூறாக நடைமேடை நடுவே வைக்கப்பட்டுள்ளது.இதனால், பயணியர் வழிப்பலகை நடுவே இருப்பதை அறியாமல் மோதி காயமடைகின்றனர். சிலர் பலகையில் இடித்துக் கொள்ளாமல் இருக்க நடைமேடை அபாய கோட்டிற்குள் நடந்து செல்கின்றனர்.எனவே, பயணியருக்கு இடையூறாக நடைமேடைக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.