கோவில் வளாகத்தில் கழிவுநீர் ஸ்ரீகாளிகாபுரம் பகுதியினர் அவதி
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், 15,000 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மேற்கில், திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள மரங்களின் அடியில், கிராமத்தினர் ஓய்வு நேரத்தில் ஒன்று கூடி விவாதித்து வருவது வழக்கம். திரவுபதியம்மன் கோவிலின் பின்புறம் புதிய குடியிருப்புகள், கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து விட்டன. இந்த பகுதிக்கு முறையான கழிவுநீர்கால்வாய் கட்டப்படவில்லை. இதனால், தெருக்களின் வழியாக பாயும் கழிவுநீர், திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களும், கோவில் வளாகத்தில் ஓய்வு நேரத்தை கழிக்கும் பகுதிவாசிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீரில் வளரும் கொசுக்களால், சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கிராமத்தில் மக்கள் கூடும் பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக கழிவுநீரை அகற்றி சுத்தமாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.