திருவள்ளூர்,:திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை - ஜே.என்.சாலை சந்திப்பில், காமராஜர் சிலை அருகில் ஆக்கிரமிப்பு 'மெகா' பழக்கடை அகற்ற காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை தயக்கம் காட்டுவதால், தினமும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருப்பதி, திருத்தணியில் இருந்து சென்னைக்கு சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை வழியாக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள், தெற்கு குளக்கரை தெரு வழியாக ஜே.என்.சாலையில் பயணிக்கின்றன. சி.வி.நாயுடு சாலை, தெற்கு குளக்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள், ஜே.என்.சாலையை இணைக்கும் பகுதியாக காமராஜர் சிலை சந்திப்பு திகழ்கிறது. இவ்விரண்டு சாலைகளையும் சந்திக்கும் இடமாக, காமராஜர் சிலை சந்திப்பில், தினமும், ஏராளமான பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் என, 50,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணிக்கின்றன. இந்த நிலையில் மூன்று சாலை சங்கமிக்கும் காமராஜர் சிலை அருகில், வாகனங்கள் திரும்பும் இடத்தில், சாலையை ஆக்கிரமித்து 'மெகா' பழக்கடை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கடைக்கு பழங்கள் வாங்க வருவோர் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், அச்சாலை சந்திப்பில் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் இந்த ஆக்கிரமிப்பினை அகற்றாமல், கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால், தினமும் காலை முதல் மாலை வரை காமராஜர் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் காமராஜர் சிலை அருகில், மூன்று சாலை சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு பழக்கடையை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.