வருவாய் அலுவலகம் படுமோசம் சிமென்ட் பூச்சு உதிரும் அவலம்
திருவாலங்காடு: திருத்தணி தாலுகாவில் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருத்தணி, செருக்கணுார், மணவூர் உட்பட ஆறு வருவாய் குறுவட்டங்கள் உள்ளன. இங்கு, மணவூர் வருவாய் குறுவட்டத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மணவூர் அரசு உயர்நிலை பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கட்டடம், தற்போது கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்து, அவ்வப்போது சிமென்டு பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன.இதனால், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ், நிலம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட சேவைகளை பெற வரும் மக்கள் அலுவலகத்திற்குள் வர அச்சப்படுகின்றனர். குறுவட்டத்தின் வருவாய் ஆவணங்கள் மற்றும் மக்களுக்கான சேவையை வழங்கும் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால், மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் சேதமடைந்து வரும் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை சீரமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.