கிருஷ்ணசமுத்திரம் ஏரியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு: மக்களுக்கு எச்சரிக்கை
திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில் மிகப்பெரிய ஏரியாக கிருஷ்ணசமுத்திரம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி, 390 ஏக்கர் பரப்பில் உள்ளதால், ஏரிப்பாசனத்தை நம்பி, ஐந்து கிராம விவசாயிகள் பயிரிடுகின்றனர்.இந்நிலையில், கடந்தாண்டு பெய்த கனமழையால் ஏரி முழு கொள்ளளவு தண்ணீர் எட்டியுள்ளது. இந்நிலையில், சில சமூக விரோதிகள் ஏரியில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக இரவு நேரத்தில் ஏரியில் இருந்து பைப் மற்றும் மின்மோட்டார் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி வந்ததால், ஏரியின்நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதனால் ஏரி பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் படத்துடன்நேற்று வெளியாகி இருந்தது.அதையடுத்து, திருத்தணி நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுந்தரம், ஏரியின் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் களப்பணியாளர்கள் கிருஷ்ணசமுத்திரம் ஏரிக்கு சென்று, நேற்று பார்வையிட்டனர்.அதிகாரிகள் வருவதை அறிந்த சமூக விரோதிகள் ஏரியில் விடப்பட்ட பைப்களை அகற்றினர். தொடர்ந்து, அதிகாரிகள் கிராம மக்களிடம், 'ஏரியில் மீன்பிடிப்பதற்கு இன்னும் ஏலம் விடப்படவில்லை.ஆகையால், சட்டவிரோதமாக ஏரி தண்ணீரை வெளியேற்றுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என,எச்சரித்தனர்.