திருத்தணி, திருப்போரூர் கோவில்களில் ஒரே நாளில் 143 திருமணங்கள் நடந்தன
திருத்தணி, திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் கோவில்களில், நேற்று ஒரே நாளில், 143க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருத்தணி நகராட்சியில், 130க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள், தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், 20க்கும் மேற்பட்ட மண்டபங்கள் என, மொத்தம் 200 திருமண மண்டபங்கள் உள்ளன. நேற்று திருமண முகூர்த்தம் நாள் என்பதால், முருகன் மலைக்கோவிலில் மட்டும், 70 திருமணங்கள் நடந்தன. இதுதவிர, திருத்தணி பகுதியில் உள்ள மண்டபங்கள் மற்றும் வீடுகளில், 140 திருமணங்கள் நடந்தன. திருத்தணியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 200 திருமணங்கள் நடந்தன. இதனால், மலைக்கோவிலுக்கு அதிகளவில் வாகனங்கள் வந்ததால், மலைப்பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பொதுவழியில் மூலவரை தரிசனம் செய்ய, இரண்டரை மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். திருப்போரூர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில் 73 திருமணங்கள் நடந்தன. கோவில் பிரகாரம், உற்சவர் மண்டபம், வட்ட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் திருமணம் நடந்தது. மேலும், முன்பதிவு செய்யாத பலரும் திருமணம் செய்ய வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் பலரும் , கோவிலை சுற்றி யு ள்ள நான்கு மாடவீதிகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். வல்லக்கோட்டை வல்லக்கோட்டை முருகன் கோவிலில், இரண்டு ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், 4 கிராம் தங்க தாலி மற்றும் 70,000 ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 26 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.