ரூ.82 லட்சத்தில் 4 வகுப்பறை பூண்டி அரசு பள்ளியில் தயார்
திருவள்ளூர்:பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 82 லட்சம் ரூபாயில், நான்கு வகுப்பறை கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.திருவள்ளூர் வட்டம் பூண்டி ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிருஷ்ணாபுரம், நெய்வேலி, நம்பாக்கம், மோவூர், சதுரங்கப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, மாணவ - மாணவியர் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், மாணவ - மாணவியருக்கு கூடுதல் வகுப்பறை தேவைப்பட்டது. இதையறிந்த தனியார் நிறுவனம் ஒன்று, சமூக பங்களிப்பு நிதி 82 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்தாண்டு நான்கு வகுப்பறை கட்டும் பணியை துவக்கியது.தற்போது, இப்பணி நிறைவடைந்து, திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளது. புதிய வகுப்பறை திறக்கப்பட்டால், நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேரும் மாணவ - மாணவியருக்கு பயனாக அமையும்.