அரசு மருத்துவமனையில் 50 படுக்கை தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை கலெக்டர் துவக்கி வைத்தார். திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ், 1.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 படுக்கை வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு பிறகான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இதை, கலெக்டர் பிரதாப் நேற்று திறந்து வைத்து கூறியதாவது: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் பயன்பாட்டில் உள்ளது. தினமும், 45 - 50 அறுவை சிகிச்சை நடக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகான தீவிர சிகிச்சை பிரிவு, தற்போது தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் திறக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆண்டுதோறும் 6,000 நோயாளிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.