நாகேஸ்வரர் கோவில் வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில், நாகவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருத்தணி முருகர் கோவில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.ராகு பரிகார தலமாக விளங்கும் இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக, கோவில் வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட காலமாக இந்த சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதியை கருத்தில் கொண்டு, சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.