உணவு கொடுக்காத ஆத்திரம்: மேசைகள் உடைத்த வாலிபர்
திருவாலங்காடு: ஹோட்டல் உரிமையாளர் உணவு கொடுக்காத ஆத்திரத்தில், வாலிபர் ஒருவர் ஹோட்டல் மேஜையை உடைத்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர். திருவாலங்காடு பவானி நகரில் வசிப்பவர் குமார், 40. இவர், அதே பகுதியில், எட்டு ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன், 24, என்பவர் ஹோட்டலுக்கு சென்று உணவு கடனாக கேட்டுள்ளார். ஏற்கனவே கொடுக்க பணம் கொடுக்க வேண்டியுள்ளதால், குமார் உணவு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், கடையில் இருந்த மேஜைகளை அடித்து நொறுக்கியுள்ளார். இதை தடுக்க வந்த குமார் மற்றும் அவரது மனைவியை நவீன் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, குமார் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து, நவீனை தேடி வருகின்றனர்.