வேளாண் உழவர் நல துறை திட்டம் வெள்ளியூரில் நல உதவி வழங்கல்
திருவள்ளூர்:வெள்ளியூரில் 'உழவரைத் தேடி வேளாண் உழவர் நல துறை' திட்ட துவக்க விழாவில், பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று 'உழவரை தேடி வேளாண் உழவர் நல துறை' திட்டத்தை நேற்று காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதாப், பூந்தமல்லி தி.மு.க.,- எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர்.கலெக்டர் கூறியதாவது:திருவள்ளுர் மாவட்டத்தில் மாதம் இருமுறை 2 மற்றும் 4வது வெள்ளிக் கிழமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 'உழவரை தேடி வேளாண் உழவர் நலத்துறை' முகாம் நடைபெறும். மொத்தம் உள்ள 770 வருவாய் கிராமங்களிலும் இவ்வருடத்திற்குள் இம்முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, உறுப்பினர்களாக வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் கிராமங்களை நோக்கி செல்ல இருக்கின்றனர்.இதனால் விவசாயிகள் தங்கள் நலன் சார்ந்த அரசு திட்டங்களை பற்றிய தகவல்கள், நவீன தொழில் நுட்பம், உயிர் வேளாண் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு தகவல் மற்றும் வேளாண் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் கலாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் மீனா அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.