அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் பாப்பரம்பாக்கத்தில் சீரழிந்த அவலம்
கடம்பத்துார்,கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், 2016 - 17ம் ஆண்டு தாய் திட்டத்தில், 30 லட்சம் ரூபாயில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.இந்த பூங்காவில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் முழுதும் முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.மேலும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், 'குடி'மகன்கள் அம்மா பூங்கா மற்றும் சுற்றியுள்ள இடங்களை மதுக்கூடமாக மாற்றி விட்டனர். இது அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் 'அம்மா' பூங்காவை பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாப்பரம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.