மாணவர்களின் திறனை மேம்படுத்த விளையாட்டு மைதானம் அமையுமா-?
திருவாலங்காடு:திருவாலங்காடில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், கிரிக்கெட், தடகளம், பூப்பந்து, டென்னிஸ் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பலர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் பயிற்சி பெறுவதற்கான விளையாட்டு மைதானங்கள் இன்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், தங்கள் பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்து, போதை பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே திருவாலங்காடு இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இங்கு விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.